உரையாடல்- 9 (பெயரிலி, அமீபா)

பெயரிலியின் வலைப்பதிவில் பெயரிலியின் பதிவிற்கானா சுதாவின் பின்னூட்டத்துடனான உரையாடல்.

சந்நிதி முருகனுக்கும் கதிர்காமக் கந்தனுக்கும் அரோகரா!
-பெயரிலி-

'சுஜாதா' ரங்கராஜன் இறந்ததற்கு, "துக்கம் கொண்டாடுவது ஏன்?" என்று பதிவு போட்டவர்களைக் கண்டிக்காத பதிவர்களை, வாய்கட்டிப்பூசாரிகள் சிலர் கண்டித்திருக்கின்றார்கள். இப்படியான தர்க்கமற்ற கேள்வி எழுப்புவதற்கும், "தமிழ்ச்செல்வன் இறந்தபோது, இனிப்பினைக் கொடுத்துக் கொண்டாடியவர்களின் செயற்பாட்டினை ரங்கராஜனின் இறப்பிற்குத் துக்கம் கொண்டாடத்தேவையில்லை" என்று முன்னிகழ்வு காட்டிப் போகின்ற - எதிர்நிலைக்காரர்களின் - செயலுக்கும் ஒரேயொரு வித்தியாசம் - எப்பக்கம் நிற்கின்றார்கள் என்பதுதான். அவரவர் ஒருவர் மீதான அவரவர் விருப்புக்கும் வெறுப்புக்குமேற்ப துக்கமோ களிப்போ அடைந்துவிட்டுப்போகிறார்கள். அத்துக்கத்துக்கும் அக்களிப்புக்கும் அவற்றுக்கான அளவுகளுக்கும் அவரவருக்கான காரணங்கள் இருக்கின்றன. இதிலே மற்றவர் போய்க் கூட்டம் போட்டு, "எதற்குத் துக்கம் கொண்டாடவில்லை?" என்றோ, "எதற்குத் துக்கம் கொண்டாடுகின்றீர்கள்?" என்றோ கேட்க என்ன உரிமையிருக்கின்றதென்று தெரியவில்லை.ஷியா உல் ஹக் விபத்திலே இறந்தபோது, பெனாசிர் பூட்டோ, "என் தந்தையைத் தூக்கிலே போட்டவன் இறந்ததற்கு நான் கவலைப்படவில்லை" என்று சொன்னார். அவரிடம் போய் எதற்காகத் துக்கம் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கமுடியுமா?

[இருக்கிற சின்னவாத்தியார்களிலே சில்மிஷம் மிக்கவர்+அதிமிஞ்சியவர் எவரோ அவர் புனையப்பட்ட 'தலைமைவாத்தியார்" அரியணையைக் கைப்பற்றும்வரைக்கும் மட்டுமல்ல, அதற்கப்பாலுங்கூட சுஜாதாவின் இறப்பு நிச்சயமாக தமிழெழுத்துக்கு ஒரு வெற்றிடமே; ஆனால், அவரின் இழப்பிலும்விட, என்னைப் பாதித்த எழுத்தாளர் என்ற வகையிலே ஸ்டெல்லா புரூஸின் இறப்பும் இறப்புக்கான அவரின் காரணமும் என்னைத் தொட்டிருக்கின்றன; அதையும்விட, நாளாந்தம் கொட்டும் குண்டுகளாலே மழலைக்கப்பால் தனது மொழி எதுவென்றே பேசவும் தெரியாத குழந்தைகளின் இறப்பு, ஒரு தந்தை என்றளவிலே என்னைப் பாதித்திருக்கின்றது. கொழும்பிலே குந்திக்கொண்டிருந்து அப்துல் கலாமின் புத்தாண்டு 'சன் டிவி' செய்தியினை இணையத்திலே பெறமுடியுமா என்றும், ஒபாமாவுக்கு blue c'o'lor தொழிலாளிகளின் வாக்கு கிட்டுமென்று கட்டுரையும், அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுசர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள், இவற்றினைப் பற்றி ஏன் துக்கம் தெரிவித்து ஓர் இழவிடுகையேனும் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கச் சொல்லி பதிவுத்திரட்டிகளையோ, தமிழிணையத்திட்டிகளையோ எவரும் இட்டுக் கேட்டதாகத் தெரியவில்லை; கேட்கவும் தேவையில்லை; அவரவர்க்கு அவரவர்க்கானது]

"சுஜாதா இறப்பினைக் கொண்டாடுவோம்" என்பது போன்ற இடுகைகள் என்னளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதேயிருக்கின்றன. ரங்கராஜனின் இறப்பினைக் கொண்டாடுமளவுக்கு அவரொன்றும் எச்சமூகத்துக்கும் கெடுதலாகச் செய்துவிடவில்லை. 'அவரின் இறப்பினைக் கொண்டாடுவோம்' என்ற வகையிலான கருத்து, அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளின் -பிராமணசங்கங்களிலே தலைகாட்டியதன், பிராமணசார்புக்கதையொன்று எழுதியதன் -விளைவானாலும், அஃது அதீதமே. தமிழகத்தின் பார்ப்பனிய அதிகாரத்துக்கு அவரே முதன்மைக்காவலர் என்பதுபோல நிறுத்திக் கொண்டாடுவது தனிப்பட்டவளவிலே எனக்கு எரிச்சலூட்டுகிறது. ('தினமலர்' அந்துமணி ரமேஷுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர் ஒருவர் சுஜாதாவின் பார்ப்பனியசார்பினைக் கண்டிக்கும்போது, அதை அவரின் கோமாளித்தனம் என்று பார்த்தாலுங்கூட எரிச்சலூட்டுகிறது). அதேநேரத்திலே, அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், அடுத்த பிறப்பிலாவது தமிழ்நாட்டிலே அரைஞாண் & பூணூலோடு பிறக்கமாட்டோமா என்ற உள்ளரிப்போடு உலாவும் ஈழத்து வாய்கட்டிப்பூசாரிகள் சிலரின் ஒப்பாரிக்கு அவரின் தலையாலே பிறந்த தன்மையும் ஒரு காரணமாகின்றது என்றால் பொய்யாகாது.

அவருடன் அம்பலத்திலே பணியாற்றிய சந்திரன் என்பவர் "சுஜாதா இறுதிக்காலகட்டத்திலே தான் பிராமணர் என்பதற்காகவே ஒதுக்கப்படுவதாக உணர்ந்தார்" என்று எழுதியிருக்கின்றார்; இஃது உண்மையா என்பதை, சுஜாதாவே வந்து அவரது இறப்பு அஞ்சலிக்கூட்டத்தினைப் பார்த்திருந்தால் அறிந்திருக்கலாம். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்திபன், சுஜாதா பெயரிலே ஆயுட்காப்புறுதி எடுத்திருக்கக்கூடிய அளவுக்கு முதலிட்ட மனுஷ்யபுத்திரன் போன்ற புதுப்பூசாரிகள் பந்தல்போட்டு வைத்த கூட்டத்திலே, சார்ந்தத(ண்ணியி)ன் வண்ணமாகும் சாருநிவேதிதா, ராமகிருஷ்ணன், பழனிச்சாமி சிவகுமார், பேசியபோது தண்ணி போடாததாலோ என்னவோ நிதானமிழந்து கணினியின் உற்பத்தியை சுஜாதாவுக்குத் தாரை வார்த்த ஜெயகாந்தன் இவர்கள் பேசியதெல்லாம் ஸ்ரீரங்கம் அரங்கராஜனை பார்ப்பனர் என்று "ஒதுக்கி" வைத்திருந்தார்களா என்பதற்கு ஒரு பாசிசாயக்காட்டியாகவிருந்திருக்கும். இன்னமும், தன்னைப் பிராமணர் என்று தள்ளிவைத்திருந்தார்கள் என்று சுஜாதா எண்ணியிருந்தால், அவர் பிராமணர் என்பதாலேயே அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரைக்கும் எழுத்து வட்டத்திலே அவரின் அங்கீகாரம் இலகுவாக்கப்படவில்லையா என்பதையேனும் எண்ணிப்பார்த்திருக்கலாம் - குறைந்தது, பிராமணர்சங்கக்கூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம். நிச்சயமாக, பரமசிவன் போன்ற தமிழ்_சமூக ஆய்வாளர்களே "சுஜாதா எப்படி சங்க இலக்கியத்துக்கு உரை எழுதலாம்?" என்று கேட்டபோது, சுஜாதா அடைந்திருக்கக்கூடிய ஆத்திரத்தினை உணரக்கூடியதாகவிருக்கின்றது; அப்படியாகக் கேட்டவர்கள் மீது ஆத்திரம் எனக்கும் வந்திருக்கின்றது. இலக்கியம் என்றால், உரை எவர் எழுதவேண்டும் கூடாது என்று வகுத்துச் சொல்ல எவருக்கும் அதிகாரமில்லை; வேண்டுமானால், உரையின் சிறப்பினை உரைத்துப்பார்த்து விவாதத்தினை வைத்துக்கொள்ளலாம். (இதே சுஜாதா, வே. சபாநாயகம் கணையாழி இதழ்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரே காரணத்தினாலே மட்டுமே சபாநாயகத்துக்கு அவை பற்றி எழுதத் தகுதியிருக்கின்றது என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்று காட்டமாகக் கேட்டதும், பரமசிவன் சுஜாதா சங்க இலக்கியத்துக்கு எப்படியாக உரையெழுதலாம் என்று கேட்ட காலகட்டத்திலேயே நிகழ்ந்தது என்பது முரண்சோகம்).

தமிழின் எழுத்துநடையையும் பேசப்படும் கருக்களையும் புதுமைப்படுத்தியதிலே, வாசகர்களை ஆர்வமுடன் அதற்கு முன்னான காலத்திலிருந்து மாறுதலான துறைகளிலே தேடி வாசிக்க வைத்ததிலே, சுஜாதாவின் எழுத்தோடு சம்பந்தப்பட்ட ஆளுமை மறுக்கப்படமுடியாதது. அவ்வகையிலே அவரது இழப்பு தமிழ் எழுத்துலகுக்கு - அவர் எண்பதுகளின் பின்னரையிலே, தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே இறந்திருந்தால் இருப்பதிலும்விட மிகவும் குறைவேயாயினுங்கூட- பெரிதே. நல்லதாகவோ, கெட்டதாகவோ அவர் போட்டு வைத்த பாதையிலே நடை பயின்றெழுந்த எழுத்தாளர்கள் பலர். ஆனால், அவரைப் பற்றிய விமர்சனங்களே வரக்கூடாதென்ற விதத்திலே, "இப்போதுதானா அவரைப் பற்றி விமர்சிக்கவேண்டும்?" என்று கேட்பவர்களுக்கு, 'அண்ணா(த்துரை) இறந்ததன் பின்னாலான தேர்தலின்போது,இறந்தவரைத் 'தெய்வமாக்கி' (sic) வாக்கினைத் திராவிடமுன்னேற்றக்கழகம் பெற்றிடக்கூடாதென்ற விதத்திலே, 'சோ'வும் ஜெயக்காந்தனும் அவரைப் பற்றிப் பேசவில்லையா?' என்ற கேள்விதான் பதிலாகவிருக்கமுடியும். ஒருவரினைப் புனிதப்பசுவாக்கி, குட்டி எல்லைக்காவற்றெய்வமாக மாற்றாதிருக்க அப்படியான - "பார்ப்பனியன் இறப்பைக் கொண்டாடுவோம்; இறந்ததுக்காகப் பதற்றம் வேண்டாம்" போன்ற எல்லைமீறிய உருப்பெருத்த அபஸ்வரங்கள் அல்லாத - விமர்சனங்களும் அவசியமே. "'கணினி' என்ற பதத்தைக் கண்டுபிடித்தவர் சுஜாதா" என்று உளறிக்கொட்டுகிறார் ஜெயக்காந்தன்; "தமிழுக்குக் கணியகராதி தந்தார்; எழுத்துருக்களை அமைத்தார்" என்ற வகையிலே தட்ஸ்தமிழ் எழுதித்தள்ளுகிறது. ('க்ரியா' தமிழகராதியிலே சுஜாதாவுக்கு பங்களிப்பு இருக்கின்றதென்றாலுங்கூட, இக்கணியகராதி பற்றி யாரேனும் சொல்ல வேண்டும்; 98 இலே கணையாழியிலே "புதுச்சொல் உருவாக்கங்கள் குடிசைக்கைத்தொழில் போல உருவாகுகின்றன; புதுச்சொல் உருவாக்கியிருக்கிறோம்; பரிசினைக் கொடுங்கள் என்பதுபோலப் புறப்பட்டிருக்கிறார்கள்" என்ற வகையிலே எழுதியவர் சுஜாதா; கணனி, கணினி என்பன பயன்பாட்டுக்கு வந்த பின்னும், "வாசகர்களுக்குச் சென்றடைவதற்காக," 'கணிப்பொறி', 'கம்ப்யூட்டர்' என்று தொங்கிக்கொண்டிருந்தவர் அவர்). "இந்தியாவிலே முதலாவது கணியமைவாக்குப்பொறி அமைத்ததிலே பாரத் நிறுவனத்திலே அவரது பங்களிப்பு என்ன" என்பதுகூடத் தெளிவாகச் சொல்லப்படாமல், அவரை கருத்துமுதல் பொருள்கொண்டு கணியமைத்ததாக ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஓர்குட் குழுமத்திலே சில பிராமண இளைஞர்கள் 'இணையம்' என்ற சொல்லே சுஜாதாதான் உருவாக்கினார் என்று வரலாறு எழுதியிருக்கின்றார்கள் (இங்கே குறிப்பாக, பிராமண இளைஞர்கள் என்று சொல்லக்காரணம், இதைப் பற்றிப் பேசப்பட்ட, குழுமமே ஓர் ஓர்குட் பிராமணர்குழுமம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் குழுமம் என்பதாலேதான். இவ்வகையிலேதான், சாதி/ஜாதி முக்கியமாகின்றதென்பது, கொழும்பிலிருந்து -அடுத்தடுத்த தெருக்களிலே தமிழ் இளைஞர்கள் பிடிக்கப்பட்டுக் காணாமற்போகும்போது- அப்துல்கலாமின் புத்தாண்டுச்செவ்வி இணையத்திலே கிடைக்குமா என்று கேட்கும் வாய்கட்டிப்பூசாரிகளுக்குத் தெரியவேண்டும். 'ஜாதி'யும் அறிவும் தமிழகசமூகத்தின் கண்டத்திலே குடுமியின் முதலைப்பிடியும் எவ்வாறு புனைகதையாக அமைக்கப்பட்டு, சமன்பாடு போடப்படுகின்றதென்பதையும் கொஞ்சம் சன் ரிவி நிகழ்ச்சிகளுக்கும் ஆனந்தவிகடனுக்கும் அப்பாலே போயும் பார்த்தாலே பிடிபடும்). சுஜாதாவின் இறப்பின்போது, அவர்மீதான விமர்சனங்களே வரக்கூடாதென்ற வகையிலும் துக்கம் தெரிவிக்காதவர்கள்மீது கண்டனம் திரட்டிகளும் திட்டித் தெரிவிக்கவேண்டுமென்று அலறுகின்றவர்கள், இப்படியான புனைகதைகளைச் சுஜாதாவின் உடலத்தின்மேலே போ(ர்)த்தி, அவரைத் திருநிலைப்படுத்தி, விமர்சனம் மறுத்த தெய்வவழிபாடுக்கு வழிபோடமட்டுமே உதவுவார்கள்.

அவர் பற்றிய வாய்கட்டிப்பூசாரிகளின் தனித்துவமான இன்னொரு புனிதப்பசுவுக்கு இன்னொரு கறவைமுலைபொருத்தும் கதையாகத்தான், "ஈழத்தமிழர்களுக்காக சுஜாதா நெக்குருகினார்" என்ற வகை இடுகைகளும் பின்னூட்டங்களுமிருக்கின்றன. நிச்சயமாக, 'சோ'+இராம்+மாலன் போன்ற இந்தீய(ப்)பத்'திரி'கையாளர்களுக்கும் சுஜாதாவுக்கும் ஈழத்தமிழர்களின் நிலை, கதை, எதிர்வினைகளிலே வெளிப்படையாகவே தெரியும் வேறுபாடுண்டு. அவர், ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளிலே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயங்கியதாக (நான் அறிய) ஏதும் ஆதாரமில்லை. ஓரளவுக்கு ஜெயலலிதா அம்மையாரின் வைசூரி ஆட்சியின்போது, தமிழகத்தமிழாராய்ச்சிமகாநாட்டுக்குச் சென்றிருந்த சிவத்தம்பி போன்றோர் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கருவாக, களமாகக் கொண்ட, "சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம்" என்ற கதையை அவர் எழுதியதும், யாழ் நூலகம், ஈழத்தமிழ்க்கவிதை (அவரின் ஈழத்தமிழ்க்கவிதைகள் பற்றிய அறிதல் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுவிட்டன என்பதை அவரின் 'கற்றதும் பெற்றதும்', கானா பிரபாவிற்கான செவ்வி என்பதிலேயிருந்து அறிந்து கொள்ளலாம்) பற்றிய குறிப்புகள் என்பனவும் ஈழத்தமிழர் மீதான அவரின் ஈரத்தனத்தினைக் காட்டுவதாகவேயிருந்தன. அதற்காக -ஈழத்தமிழர் குறித்த மறை உணர்வும் குறைப்புரிதலும் கணிசமாக நிறைந்த 'அறந்தாங்கி அஹிம்ஸாமூர்த்திகளான" 'துக்ளக்+த ஹிண்டு+இந்தியா ருடே" வாசகப்பரசுராமர்களிடையே நிறைய மதிப்பினைப் பெற்றிருந்த - அவருக்கு நன்றி. [இதையே ஆள்வோர் பின்பலமற்ற வேறு படைப்பாளி எழுதியிருக்கமுடியாதென்றாலுங்கூட, எழுதிய அவருக்கு நன்றி] ஆனால், இவ்விடத்திலே அவர் ஒரு கரு(க்)கட்டும் கதையாளி என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவருக்கு -எல்லா எழுத்தாளர்களையும்போலவே - சந்திக்கின்றவர்கள் சொல்லும்/தரும் கருக்களும் சொற்களும் -ஏன் சந்திப்பவர்களுமே- கதைக்கானவைதான். அவருக்கு(ம் மணிரத்தினத்துக்கும்) 'கன்னத்தில் முத்தமிட்டால்" எழுதக் கருவும் (இடைக்காலச்சமாதான ஒப்பந்தமும் புலம்பெயர் பார்வையாளர்கள் தொகையும் இந்தியத்தயாரிப்புக்குத் துணிவினைத் தந்திருந்தால்) இந்தியாவின் செயற்பாடுகளிலே விமர்சனம் வைக்காத கதைகளும் ஆக்கமுடியுமானால், அவரின் பிரபலத்தோடு அவற்றினைச் செய்ய ஏதும் தடையில்லை ['கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்த அதே காலத்திலே தடை செய்யப்பட்ட புகழேந்தியின் ஈழம் தொடர்பான 'காற்றுக்கென்ன வேலி'யை இங்கே நினைவுகூர்வோமாக]. இதுதான் சுஜாதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையின் எல்லை: '"சோராமாலன்" உடனோடு ஒப்பிடும்போது, இவர் 'ஒரு மூட்டை அரிசியையாவது விதைத்தவருக்குத் திருப்பித் தந்தாரே' என்ற நிலைதான்.' நிச்சயமாக, அதற்காகவேனும் நன்றியுள்ளவர்களாக, கொழும்பிலே குந்தியிருந்து இந்தியாவின் ஆளுமைகளுக்காக உருகும் வாய்கட்டிப்பூசாரிகளும் நானும் என்னைப் போன்றவர்களும் இருப்போம் - "தளையசிங்கத்தைக் கிண்டி ஆழமும் முத்துலிங்கத்தை விராண்டி அகலமும் கண்டுபிடித்துத் தமிழகத்துக்குச் சொன்னதற்காக, ஜெயமோகனருக்கு நன்றி உடையவர்கள்போல." ஆனால், நெருக்கடி நிலைகளிலும் தமிழகத்தின் பதிப்பகங்களிலும் படைப்புகளிலும் ஈழத்தமிழர்கள் பற்றி நூல் வெளியிட்ட, வெளியிடும் படைப்பாளிகள் குறைந்தது ஐவரையாவது, இந்த வாய்கட்டிப்பூசாரிகள் சொல்வார்களானால், நன்றியுடைத்திருப்பேன்.

மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம்....
..... மூளையில் வரல் ஆற்றுச்சளி கட்டாதவரையில்.

அமீபாவின் பின்னூட்டம்.

சற்றுப் பிந்திய பதிவு என்றாலும் பலர் சொல்லாமல் விட்ட விடயங்களை சொல்லிச் சென்றிருக்கின்றீர்கள். உதாரணமாக இந்திய இலக்கியவாதி ஒருவரை இந்தியாவில் இருந்து பார்க்கும் ஒருவருக்கும் இலங்கையில் இருந்து பார்க்கும் ஒருவருக்கும் பல விடயங்களில் வித்தியாசம் இருப்பதாகவே நினைக்கின்றேன்.

சுஜாதா என்ற பெயரை எனது 11 ஆவது வயதில் முதன் முதலில் கேள்விப்பட்டேன். அக்காலத்தில் ராணி காமிக்ஸ் மற்றும் ராணி முத்து என்பதில் இருந்து விடுபட்ட காலம். முதலில் அவர் ஒரு பெண் என நினைத்தேன். ஆயினும் அவர் ஒரு ஆண் என தெரியவர எனக்குச் சில காலங்கள் பிடித்தது. ஆயினும் அவரது கதைகளில் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் இருந்தது எனக்கூற முடியாது. ஏனெனில் அவ்வயதில் எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்த துப்பறியும் கதைகளை வேறு பலர் எனக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், சுபா போன்றோர். ஆகையால் 'வாசிப்பு பேராசையால்' அவதிப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு கிடைக்கும் போதெல்லாம் சுஜாதவையும் விடாமல் வாசிப்பேன். சிறிது காலங்களின் பின்னர் அவரது இரட்டை அர்த்த வசனங்களால் கவரப்பட்டு அவற்றைக் களவாக ரசிக்க தொடங்கியிருந்தேன். ஆயினும் அவை எனக்கு போதுமாய் இருக்கவில்லை. ஆயினும் அதன் பின்னான காலங்களில் அதில் இருந்து சற்று வித்தியாசமான எழுத்தாளர்களின் பால் கவனம் திரும்பியது. உதாரணமாக ஸ்டெல்லா புரூஸ், ஆர்னிகா நாசர் போன்றோர் மேற்கூறியோரை விட சற்றுப் புத்திசாலைகள் போல எனக்குத் தென்பட்டார்கள். எனக்குச் சற்றுச் சவாலாகவும் விளங்கினார்கள். அத்துடன் குற்றங்கள் தொடர்பாக அதன் மனநிலையை நேர்மையாக முன்வைத்தது போல் தோன்றியது. ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், சுபா மற்றும் சுஜாதா போன்றோரின் நாவல்களின் போக்கு குற்றங்கள் தொடர்பில் மிகவும் சினிமாத்தனமானவை. குற்றவாளியை கட்டமைக்கும் வன்முறை கொண்டவை. குற்றவாளி உருவாக்கத்தில் மிகவும் மோசமான வன்முறையை கையாள்பவர்கள். குற்றவாளிகள் தொடர்பில் பொதுச்சமூகவெளி கட்டமைக்கும் மனநிலையை மேலும் வலுப்படுத்தும் கேவலமான வேலையை தமது வாழ்நாள் முழுமைக்கும் அவர்கள் செய்தே தொலைத்தார்கள். விளிம்பு என்பதை பொதுச்சமூகவெளிக்கு அப்பாற்பட்ட நிராகரிக்கப்படவேண்டிய தளமாக கட்டமைப்பதில் பெரும்பங்காற்றுபவர்கள் என்றவகியில் அவர்கள் தொடர்பில் எனக்கு தற்போது இருக்கும் உடன்பாடின்மைகள் மிகப்பெரியவை. இவை தொடர்பில் எமது சமூகத்தின் அவலத்திற்கு இவர்களின் பங்கும் கணிசமான அளவென்பது எனது நிலைப்பாடு. இதனைப் பிராமணிய மனநிலை என்று கூறலாம். அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட 'எல்லாவற்றையும்' கொண்டாடுவதின் ஊடாக மற்றமையை நிராகரித்தல் என்பது இவர்களின் பொது நிலைப்பாடாக இருந்தது. அவர்களின் வியாபாரத்திற்கும் தேவையாக இருந்தது.

சில காலங்களில் சுஜாதாவை மறந்துவிட்டேன். அவர் எனக்குத்தேவைப்படவும் இல்லை. வாசிப்பு வேறு பக்கத்திற்கு திரும்பிவிட்டது. ஆயினும் 15 ஆவது வயதில் சுஜாதா வின் 'ஒரு விஞ்ஞான பார்வையில் இருந்து' என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. அது எனக்குள் ஒரு புதிய பாதையை திறந்தது போன்ற பார்வையை ஏற்படுத்தியது. அது நவீன பௌதீகத்தையும் சைவ சித்தாந்தத்தையும் இணைத்து எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட ஒரு நூலாகும். அந்நூல் மிகச்சிறிய நூல் என்ற போதும் அந்தவயதில் எனக்குள் சில வித்தியாசமான கிளர்ச்சியை உருவாக்கியது. அன்றில் இருந்து நான் மதம் தொடர்பான விடயங்கள் வரும் போதெல்லாம் அந்நூலை நினைஇகுமளவிற்கு எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அந்நூல். அந்நூலை என்னுடன் பல காலம் காவித்திரிந்தேன். பலமுறை வாசித்திருக்கின்றேன்.

சில வருடங்கள் உருண்டோடிய பின்னர் 18 ஆவது வயசில் , மதங்கள் மீதான அவநம்பிக்கைகளுடன் இருந்த காலத்தில் ஒரு முறை மூன்றாவது மனிதன் இதழ் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அதில் மு.பொ காப்ராவின் நூல் ஒன்றைப்பற்றி எழுதி இருந்தார். அதன் பெயர் தாவோ பிசிக்ஸ் என்பதாகும். அதில் மு.பொ காப்ரா பற்றிய சிறிய குறிப்பு ஒன்றை எழுதி உள்ளதோடு காப்ராவினது பார்வை பௌதீகவியல் ஆய்வுக்கு முக்கியமானதெனவும் குறிப்பிடுகின்றார். அதில் காப்ரா சின்ன பொடியங்களைப் போல புழுகி இருப்பதாக எனக்குப் பட்டது. ஏனெனில் சிவனது நர்த்தனம் தனக்கு மூலக்கூறுகளைன் இயங்குகையை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன் தான் இப்புத்தகத்தை எழுதும் இவ்வேளை தான் இதை எழுதுவதாக உணராமல் யாராலோ எழுதப்படுவதாக உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

அதற்கு சில காலங்களுக்கு பின்னர், அறிவியல்- அதிகாரம்- ஆன்மீகம் என்ற நிகழ் கட்டுரைகளின் தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அதில் ஈழத்து எழுத்தாளர் ராம் பிரேமிள் பங்கு பற்றிய விவாதம் ஒன்றை வாசிக்க நேர்ந்தது. பிரேமிள் சுஜாதாவிற்கு நெருப்படி கொடுத்திருந்தார். அதுவும் எனது ஆஸ்தான புத்தகமான 'ஒரு விஞ்ஞான பார்வையை' முன்னிறுத்தி.. தற்போது இந்த புத்தகத்தை வைத்திருக்கின்றேன். அதிலிருந்து சில விடயங்கள்..
...........ஒருவர் இன்னொருவருக்குப் பரிசோதனை வடிவத்தில் நிரூபிக்கக்கூடியதை மட்டுமே ஒப்புக் கொள்ளவேண்டும்.- இது தான் விஞ்ஞான மனோபாவம் இருவருமே பரிசோதனையினை ஏற்றுக் கொள்கிற மன ஒழுக்கம் உள்ளவர்களாக இருந்தாக வேண்டும் என்பது வெளிப்படை. விஞ்ஞான மனோபாவம் இந்த மனவொழுக்கத்தையே சார்ந்தது. கல்வியையோ படித்துப் பெற்ற பட்டத்தையோ அல்ல, விஞ்ஞானக் கல்வி பெற்றிராத சிலரிடம் இந்த மனஒழுக்கத்தைச் சந்திப்பது போலவே விஞ்ஞானக் கல்வி பெற்ற பட்டதாரிகளிடம் இந்த மனஒழுக்கம் இல்லாத நிலையை நாம் அவ்வப்போது காணலாம். ஒரு விஞ்ஞானப் பார்வையில் இருந்து என்ற நூல் இதில் மனஒழுக்கம் இல்லாத ஒரு விஞ்ஞானப்பட்டதாரியை நமக்குக் காட்டுகிறது. ...... இந்நூல் விஞ்ஞான அடிப்படைகளை அறிந்த ஆன்மிவியலாளர்களுக்கு ஒரு புறமும், விஞ்ஞானிகளுக்கு மறுபுறமும் அருவருப்பைத் தரக்கூடியது இது... புலன்கள் மூலமும் புலன்கள் சார்ந்த அறிவின் மூலமும் பிரபஞ்சத்தை ஆராய்வதே விஞ்ஞானம். இந்த முறை பிரபஞ்சத்தை அறிய உதவாது என்று உணர்பவனே ஆன்மவியலாளன், இன்றைய பௌதீகத்திற்கும், அதன் அடிப்படையான கணிதக் கோட்பாடுகளுக்கும் தந்தையான ஐசக் நியூட்டனிடத்தில், ஒரு கட்டம் ஆன்மீகத் தேடலாகவும் இருந்திருக்கிறது. இந்த இரண்டுமே ஒரே உண்மையைத் தான் பேசுகின்றனவா என்று நியூட்டன் கவலைப்படதே இல்லை. ஏன் கவலைப்படவில்லை?- இந்த கேள்வியை எழுப்பினால்தான், அங்குள்ள காப்ராக்களும், இங்குள்ள சுஜாதாக்களும் உண்மையில் விஞ்ஞானத் தேடல் காரர்களும் அல்ல என்று உணர முடியும். இவர்கள் நவீன விஞ்ஞானத்தின் விளைவான வசதிகளையும், விஞ்ஞானத்தை அனுசரித்துப் பேசுவதன் மோஸ்தரையும் கௌரவிப்பவர்கள், அதேநேரம் தங்கள் பூர்வீக மரபுகளை விட்டுக் கொடுக்க விரும்பாதவர்கள் உண்மையான விஞ்ஞனப் பார்வையிலும் சரி, ஆன்மீகப்பார்வையிலும் சரி மோஸ்தருக்கோ பிடிவாதமான பாதைகளுக்கோ இடமில்லை.............
என்று கூறுகிறார் ராம் பிரேமிள்.

இதனால் எனக்கு குவாண்டம் பிசிக்ஸ் இல் இனம்புரியாத விருப்பம் ஒன்று இருந்துகொண்டேயிருந்தது. பல்கலைக்கழகத்தில் குவாண்டம் பிசிக்ஸை எனது விருப்ப பாடமாக தெரிவு செய்யும் போது சுஜாதா, மு.பொ மற்றும் பிரேமிள் மூவரும் கண்முன்னே தோன்றினார்கள். மிகவும் விருப்பட்டு அப்பாடத்தை தெரிவு செய்தேன். ஆயினும் செமிஸ்ரர் பரீட்சைக்கு முதல் நாள் நோர்வேயில் இருந்து வந்திருக்கும் நண்பர் ஒருவர் பெரிய பார்ட்டி ஒன்று வைப்பதாகவும் அதில் பல முக்கியமான பாதாள உலகக் கோஸ்டிகள் வர இருப்பதாகவும் என்னை நண்பர் அழைத்ததின் பேரில் போய்விட்டு உடனடியாக வருவோம் என்ற நினைத்தவாறு பார்ட்டிக்கு சென்றேன். ஆயினும் பார்ட்டி உச்சத்திலும் பாதாள நண்பர்களின் 'புரட்சி'ப் பேச்சிலும் மயங்கிய நான் அதிகாலை 5 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்றில் அரைக்கணை மூடியபடி வீடு போகும் போது சுஜாதா, மு.பொ மற்றும் பிரேமிள் மூவரும் கண்முன்னே தோன்றினார்கள். மதியம் 12 மணியளவில் முழிப்பு வந்த போது எக்சாம் முடிந்திருக்கும் என நினைத்து சந்தோசப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை..

சில காலங்களின் பின்னர் நண்பர் ஒருவர் தாவோ பிசிக்ஸ் என்ற புத்தகத்தை தனது புத்தக அலுமாரியில் வைத்திருக்க கண்டு அதனை மிகவும் விருப்பத்துடன் எடுத்துக் கொண்டுபோய் வாசித்தேன். கீழைத்தேய தத்துவங்கள் தொடர்பிலான அறிமுகங்களே என்னை ஆகர்சிக்கவில்லை. அதன் பின்னர் குவாண்டம் பிசிக்ஸ் தொடர்பான விடயங்களும் மிகவும் அடிப்படையானவையாக இருந்தன. ஆயினும் படிக்க வேண்டும் என்பதற்காகப் படித்தேன். அதன் பின் கீழைத்தேய தத்துவங்களையும் நவீன பௌதீகத்தையும் இணக்கும் பகுதிக்கு வந்திருந்த போது எனது கிராமத்து வீட்டில் எனது அறைக்கு அருகே இருக்கும் மல்லிகைவாசத்தை உணர்ந்தேன். மரங்கொத்தி மரத்தை கொத்தும் ஓசை எனக்கு கேட்கத் தொடங்கியது. எனது கிராமம் என் முன் விரிந்து வாசிப்பதற்கு இடையூறை ஏற்படுத்தியது.
ஏனெனில் சுஜாதாவின் புத்தகத்தை நான் எனது கிராமத்தில் எனது அறையில் இருந்தே வாசித்திருந்தேன். அத்துடன் இரண்டும் புத்தகங்களும் ஒரே மாதிரி இருந்தது எனக்கு வியப்பளிக்கவில்லை ஏனெனில் சுஜாதாவின் சில கட்டுரைகளை உயிர்மையிலும் சுஜாதாவின் படங்களை தியேட்டரிலும் பார்த்தாகிவிட்டது.

ஆயினும் தாவோ பிசிக்ஸ் பற்றி ஒரு முறை பெயரிலியுடன் உரையாடியிருந்தேன். அப்போது பெயரிலி அதற்கு பின்னே அதன் ஆசிரியர் தனது நூலை மறுத்து எழுதியதாக கூறினார். பின்னர் நானும் இணையத்தில் தேடிப்பார்த்த போது அது பௌதீகவியலாளர்களால் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியதாக அறியக்கிடைத்தது. தாவோ பிசிக்ஸ் என்ற புத்தகம் 1975 இல் வெளிவந்துவிட்டது. அதன் பின்னர் அதன் மீள்பதிப்பு 1982 வந்தது. இரண்டினது முன்னுரைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதெனச் சொல்லப்படுகின்றது. காப்ரா தனது கருத்தை மறுத்திருப்பதாகவும் அறியக்கூடியதாக இருந்தது. ஆயினும் சுஜாதா தனது இக்கருத்தை- காப்ராவிடன் கடன் வாங்கிய- கருத்தை மறுத்ததை நான் அறியேன். பிரேமிள் சொன்னது போல தமது மரபுகளை பேணுவதற்காக அவர் விஞ்ஞானத்தை ஒரு கருவியாக்கினார்.

ஆயினும் ஈழம் தொடர்பாக சுஜாதா பெரிதாக எதுவும் கூறியதாக நான் அறியேன். சில விடயங்கள் கொஞ்சம் நெகிழ வைத்தது. ஒருமுறை எங்கோ கேள்வி- பதில் பகுதியில் "நல்ல தமிழைக் எங்கே கேக்கலாம்?" என்ற கேவிக்கு "ஒரு கடலையும் சில குண்டுச் சத்தங்களையும் தாண்டிப் போக வேண்டும்" எனக்கூறியதாக நினைவு. வேறு விடயங்கள் சொல்வதானால், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத்தொகுதியில் உள்ள மைத்ரேயி இனது 'முகம் மறுக்கப்பட்டவர்'கள் கவிதையை தற்கொலைப் போராளி வாசித்துக் காட்டுவதாக ஒரு காட்சி மற்றும் கன்னதில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஈழம் தொடர்பான சில திரைக்கதை வசனங்கள், அவர் ஒருவித அறியாமையினூடான உயர்வு அபிப்பிராயத்தை வைத்திருந்தார் என நினைக்க தூண்டின.. உச்சமாக சிவாஜி படத்தில் ரஜனி தமிழ்ப்பொண்ணு வேணும் எனக் கேட்க விவேக் சொல்லுவார் "நீ கேட்கிற பொண்ணுக்கு நாம யாழ்ப்பாணம் தான் போக வேண்டும்." என. இவ்வாறாக ஈழம் தொடர்பாக அறியாமையூடாக ஈழம் மற்றும் ஈளமக்கள் தொடர்பாக உயர்வு(!?) அபிப்பிராயம் ஒன்றை அவர் வைத்திருந்திருக்க கூடும் என நினைக்க தோன்றுகின்றது.- இது மேம்போக்கான தளம்-

ஆயினும், அவர் இந்திய தேசியவாதத்தை பலமாக ஆதரித்த ஒருவர். அதனூடாக தனது சார்ப்புத் தேசியவாதத்திற்கு விட்டுக் கொடுக்க முடியாத அராஜக மனப்போக்கைக் கொண்டிருந்தார். அதற்கு போய்ஸ் படத்தில் நக்சலைட்டுக்களுடனான சில உரையாடல்கள் மற்றும் ரோஜா படத்தில் தீவிரவாதத்தை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை அந்த தீவிரவாதம் கூடாது எனக்கூறும் உரையாடல் வரும் பகுதிகள் உதாரணங்களாகும். புரட்சிகளையும் போராட்டாங்களையும் நசுக்கும் மனநிலை கொண்ட அதிகாரவர்க்கத்திற்கு சார்பான உரையாடல்கள் அவை. இன்னும் இந்திய தேசியவாதம் கேள்விக்கு உட்படாமல் பூஜிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையை பொதுச்சமூக மனவெளியெங்கும் விதைத்திருப்பவை அவை. பிராமணிய மனநிலைக்கு ஒப்பானவை அவை.

இந்திய தேசியவாததின் ஒதுக்கலுக்கு உள்ளாக்கும் திராவிட தேசியவாதம் பற்றியதும் அது சார்பானதுமான பதிவர்களுக்கும் நக்சலைட் நடவடிக்கைகள் மூலம் செயற்பாட்டுத்தளத்தை தகவமைத்துக் கொண்ட பதிவர்களுக்கும் சுஜாதா நிச்சயம் எதிர்க் கருத்தாளர் மட்டுமல்ல சமூகத்தில் அதிகாரத்தில் நின்றவாறு தமது குரல்களைக் கேவலப்ப்டுத்தியவர் என்ற மனநிலையும் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அவர்கள் அநிலையில் நின்று அவரை விமர்சித்திருப்பார்கள். ஆயினும், 'சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு' என்ற பூச்சுத்தல் எமக்கு தேவை இல்லை நண்பா.. ஈழத்து பதிவர்கள் சுஜாதா வின் மறைவு தொடர்பாக உணர்ச்சிவசப்படுவது அவர்களின் அறியாமையால் வந்த வினையே.. சுஜாதாவின் இழப்பு மனுஸ்யபுத்திரனுக்கும் சங்கருக்கும் வேண்டுமென்றால் பேரிழப்பாக இருக்கலாம். தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்று சொல்பவர் தமிழ் இலக்கியம் என்று எதைக் கருதுகின்றார் என்பதை நினைக்கும் போது பதிவர்கள் மீது அனுதாபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், தூக்கணாங்குருவிகள், துடைப்பக்குச்சிகள், சங்குகள், சாமரைகள், ஆலவட்டங்கள், ஜால்ராக்கள், கைப்புள்ளைகள், தூக்குச்சட்டிகள், ...........................................

-அமீபா-

0 comments: